search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஸ் மொபட் மோதல்"

    அரசு பஸ் மொபட் மீது மோதிய விபத்தில் வங்கி பெண் ஊழியர் பலியானார். தப்பி ஓடிய பஸ் டிரைவரை போலீசார் இன்று கைது செய்தனர்.
    ஆரல்வாய்மொழி:

    நாகர்கோவிலை அடுத்த தேரேகால்புதூரைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமாரி. இவரது மகள் இந்து(வயது24).

    நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியில் உள்ள அரசு வங்கியில் இந்து, தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று வங்கி பணி காரணமாக வீரநாராயணமங்கலத்திற்கு மொபட்டில் சென்றார். பழையாற்று சானல் கரையோரம் சென்ற போது அந்த வழியாக வந்த அரசு பஸ் மொபட் மீது மோதியது. இதில் மொபட்டில் சென்ற இந்து, பஸ் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.

    விபத்து நடந்ததும் அப்பகுதி மக்கள் ஓடி வந்து இந்துவின் உடலை மீட்டனர். பொதுமக்கள் திரண்டு வந்ததால், அரசு பஸ் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானார். இதற்கிடையே ஆரவாய்மொழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அவர்கள் இந்துவின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் தப்பி ஓடிய டிரைவர் குறித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் மார்த்தாண்டத்தை அடுத்த பாகோடு பகுதியைச் சேர்ந்த கிரிதர்(43) என தெரியவந்தது. அவர் மீது போலீசார் இந்திய தண்டனை சட்டம் 279, 304(ஏ) ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அவர் இன்று கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
    ×